சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிரிய நீதிமன்றமொன்றினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர்களுக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு தாரா (Daraa) பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப்புக்கும் (Atef Najib) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசாத் மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோதே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்ரா அன்சார்









