இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணவனுப்பல்கள், கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 2.294 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்களாக கிடைத்துள்ளன. இதன்படி, ஜனவரி மாதத்தில் 751 மில்லியன் டொலர்களும், பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர்களும், மார்ச் மாதத்தில் 815 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன.
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெறப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்களின் அளவு 1,815 மில்லியன் டொலர்களாகும். அரசாங்கத்தின் நிதி மீதான நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழிலாளர்கள் சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்துவதற்கு பணியகத்தினால் ஊக்குவிக்கப்பட்டமை ஆகியவையே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை 62,145 நபர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









