மட்டக்களப்பு நகருக்குள் 23.04.2026 அதிகாலை கண்டெய்னர் லொறியொன்று கடைகளை உடைத்துக்கொண்டு பாரிய விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த லொறி, மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் மட்டக்களப்பு நகருக்குள் வைத்து இந்த விபத்திற்குள்ளானது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
வீதியோரத்திலிருந்த கடைகளை உடைத்துக்கொண்டு லொறி பாய்ந்ததில் கடைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் குறித்த பகுதிக்கான தொலைத்தொடர்பு கம்பிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
விபத்தின் போது சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக வேறு எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இவ்விபத்து தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, துண்டிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மீளச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொலைத்தொடர்பு நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.










