ஏ.எஸ்.எம்.ஜாவித் 2026.07.26
சிறப்பாக இடம்பெற்ற அஹதிய்யா சம்மேளனத்தின் 75 வந்து பவள விழா.
இலங்கை வரையறுக்கப்பட்ட இஸ்லாமிய போதனா கழகம் மற்றும் அகில இலங்கை அஹதிய்யா அறநெறிப் பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா கடந்த சனிக்கிழமை (25) கொழும்பு மருதானை எல்பிஸ்டன் மண்டபத்தில் சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம்.ஆர்.எம்.ஸரூக் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பவள விழாவை முன்னிட்டு 25வருடங்களுக்கு மேல் நீண்டகால அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் அதிபர்கள், ஆசிரியர்கள் நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், தேசிய மட்டத்தில் அஹதிய்யா இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்த சாதனை படைத்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டனர், ஸஹீஹுல் புஹாரி பாடநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 10 ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சம்மேளனத்தின் 75வது பவளவிழா நினைவு மலர் மற்றும் ஸஹீஹுல்புஹாரி நூல் என்பன வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் சம்மேளனத்தின் 75ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் நினைவு முத்திரையும் கடித உறைகளும் உத்தியோ பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டன.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தசாசன கலாச்சார சமய மதவிவகார அமைச்சர் கலாநிதி ஹீனிதும சுனில் செனிவி, கெளரவ அதிதியாக முஸ்லிம் சமய கலாசார பிரதி அமைச்சர் அஷ்ஷேய்க் முனீர் முழப்பர், விஷேட அதிதியாகவும் விசேட பேச்சாளராகவும் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பிரதானி ஏ.சீ.அகார் முஹமட் ஆகியோருடன் சிறப்பதிதிகளாக உலமாக்கள், கல்வியியலாளர்கள், தொழிலதிபர்கள் மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள், மாணவர்கள்,,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது அஹதிய்யா பாடசாலை மாணவ மாணவிகளின் இஸ்லாமிய ஹஸீதா பாடல்கள், கும்மிப்பாட்டு போன்ற இஸ்லாமிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் அதிதிகளுக்கு சம்மேளத்தினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








