வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவது குறித்து நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி நான்கு வகை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே,
25 இருக்கைகள் கொண்ட பேருந்துகள், 10 முதல் 16 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வான்கள், இரட்டை கெப் வாகனங்கள்; மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்ய இந்த வர்த்தமானி அனுமதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி கட்டமைப்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், தொடர்புடைய சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி பொருந்தாது என்பதை தெளிவுபடுத்திய அவர், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம், அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anurakumara Dissanayake) தலைமையில், நேற்று 1969 ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.