13 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிங்கிரிய, ஹிருவெல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டிலிருந்த அவரது தாய் கடந்த மாதம் 01 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.
தாய் வெளிநாட்டில் இருந்த காலத்தில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரும் அவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னைத் தொடர்ச்சியாகப் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதாகச் சிறுமி, நாட்டிற்குத் திரும்பிய தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கமைய தாய் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









