பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.
20.08.2026 பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது பற்றிய சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்காக தற்போது நடைமுறையிலுள்ள தண்டப் பணத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு இத்திருத்தச் சட்டமூலம் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது பற்றிய சட்டமானது, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்தவொரு வேலையிலும் அமர்த்துவதை முற்றாகத் தடை செய்துள்ளது.
அத்துடன், 16 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களை வேலையில் அமர்த்தும்போது முதலாளிமார்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய பல விசேட ஒழுங்குமுறைகளையும் நிபந்தனைகளையும் இச்சட்டம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









