இந்தோனேசியாவின் பாலி தீவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வும் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆகப் பதிவாகியிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கிலி ஏர் பகுதியிலிருந்து 181 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலி கடலின் மையத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அவை முறையே 5.4 ஆகவும், 5.6 ஆகவும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்போது கடற்கரைப் பகுதிகளில் பலத்த அலை வீசியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமில்லை என்று புவியியல் ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.