இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை’ அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்து விபரங்களை முழுமையாக முடக்குவதற்கு முடியும். அதன்படி, அந்தச் சொத்துக்களைப் பயன்படுத்துதல், மாற்றுதல் அல்லது விற்பனை செய்தல் என்பன சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படுகின்றன.
இந்த நடைமுறையானது, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் மூலம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1373 (2001) தீர்மானத்திற்கு இணங்க செயல்படுத்தப்படுகிறது.
இத்தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் உள்ள அதேவேளை, அதன் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் “தகுதியுள்ள அதிகாரியாக” நியமிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கும், நாட்டின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும், சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகத்தினால் www.competentauthority.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நவீன சட்ட மற்றும் நிர்வாக நடைமுறையூடாக இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










