தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை (NLDB) இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.300 மில்லியன் நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என அமைச்சர் தெரிவித்தார். உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சபை தனது இலாபத்தன்மையை மேம்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்த பால் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் புல் மற்றும் மக்காச்சோளப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல், குறைவாகப் பயன்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி மேலதிக வருமானத்தை ஈட்டுதல், பெறுமதி சேர்க்கை மற்றும் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துதல், அத்துடன் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபையின் இனப்பெருக்கக் கோழிப் பண்ணைகள் இந்த இலாபத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. குறிப்பாக, கரந்தகொல்ல, மிரிஸ்வத்த மற்றும் மாவத்த பிராய்லர் இனப்பெருக்கப் பண்ணைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.









