மொஸ்கோ மற்றும் பெர்லினுக்கு இடையிலான இராஜதந்திர பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜேர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள துணைத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
ஜேர்மனியின் துணைத் தூதரகம் செப்டம்பர் 18ஆம் திகதிக்குள் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், அதே திகதிக்குள் அனைத்து ஊழியர்களும் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொன்னில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகம் மற்றும் பெர்லினில் உள்ள ரஷ்ய மாளிகை கலாசார நிலையத்தை மூடுவதற்கு ஜேர்மனி எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் திகதி லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என குற்றம் சாட்டி, ஜேர்மனி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
விமான நிலையத்தில் உக்ரேனிய விமானமொன்றுக்கு அருகில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பின்னர் அது செயலிழக்கச் செய்யப்பட்டது. எனினும், ரஷ்யா இந்த சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதை மறுத்துள்ளதுடன், ஜேர்மனியின் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.
மேலும், ரஷ்யாவில் செயல்பட்டு வரும் ஜேர்மனியின் Goethe-Institut கலாசார நிலையங்களையும் மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள ஊழியர்கள் செப்டம்பர் 13ஆம் திகதிக்குள் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய பின்னடைவுக்கு பெர்லினே காரணம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. ஜேர்மனியே இரு நாடுகளுக்கும் இடையில் புதிய பதற்ற நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் இந்த முடிவை ஜேர்மனி விமர்சித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துணைத் தூதரகத்தை மூடுவதற்கான ரஷ்யாவின் முடிவு “வருத்தத்திற்குரிய தவறு” என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதை மேலும் கடினமாக்கும் என்றும் ஜேர்மனி குறிப்பிட்டுள்ளது.









