இரத்தினபுரியை உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் முக்கிய மையமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி கிராண்ட் சில்வர் ரே வளாகத்தில் நடைபெற்ற “Gem City Ratnapura 2026” சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் (LGDMA) ஆகியவற்றால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
உள்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்படும் இரத்தினக்கற்களுக்கான மையமாக மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரத்தினக்கற்களுக்கு பெறுமதி சேர்த்து சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் உலகளாவிய மையமாகவும் இரத்தினபுரியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் மூலம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையிலிருந்து ஆண்டுதோறும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இத்துறையின் சர்வதேச போட்டித்தன்மையை வலுப்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்களின் அதிக பங்களிப்பு மற்றும் அதிகாரமளித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் பெறுமதி சேர்க்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பிரதான உரையை நிகழ்த்திய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை இரத்தினக்கற்களான நீலக்கற்கள் உள்ளிட்டவற்றுக்கான சர்வதேச சந்தைகளை விரிவுபடுத்த வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களை பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.









