பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
BREAKING NEWS எனக் குறிப்பிடப்பட்டு, பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் பொய்யானவை என தெரிவித்துள்ள அதிகாரசபை, இவ்வாறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தையில் தவறான புரிதல்களும் ஏற்படக்கூடும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.









