நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு, சொத்துகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் மனப்பூர்வமான ஒற்றுமையையும் தெரிவித்துள்ளது.
தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ACJU தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தத் துயரமான பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்காகத் துணிச்சலுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மீட்புப் பணியாளர்கள், அரச அதிகாரிகள், மனிதாபிமான அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் ஏனைய அனைவரின் அயராத முயற்சிகளையும் ACJU பாராட்டியுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில், மதம், இனம் அல்லது பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இலங்கை முஸ்லிம் சமூகத்தினரும் அனைத்து இலங்கை மக்களும் நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்குமாறு ACJU கேட்டுக்கொள்கிறது.
தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நலன்விரும்பிகள், உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் ஏனைய அவசர நிவாரணத் தேவைகளை வழங்குவதற்காக, நம்பகமானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான மனிதாபிமான வழிகளின் ஊடாக தாராளமாகப் பங்களிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
2015ஆம் ஆண்டு நேபாளத்தைப் பேரழிவுக்குள்ளாக்கிய கோர்கா நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU), இலங்கையின் பல முக்கிய முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து, பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியிருந்தது என்பதையும் நினைவுகூர்வது முக்கியமானதாகும்.
அப்போது நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கொழும்பிலுள்ள நேபாளத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மதம் அல்லது தேசிய எல்லைகளைப் பொருட்படுத்தாமல், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இலங்கை மக்கள் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வரும் கருணை, மனிதாபிமான ஒற்றுமை மற்றும் ஆதரவின் உணர்வை இது எடுத்துக்காட்டுகிறது.
இதேபோன்று, நேபாள மக்களை தமது பிரார்த்தனைகளில் நினைவுகூருமாறும், தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் ஆறுதலும், காயமடைந்தவர்களுக்கு பூரண குணமடைதலும், இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வலிமை, பொறுமை மற்றும் மீண்டெழும் ஆற்றலும் கிடைக்குமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் ACJU அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நேபாள மக்களின் துயரங்களை நீக்கி, மேலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பையும் விரைவான மீட்சியையும் வழங்குவானாக. இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்களுக்கு வலிமை, ஆறுதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை வழங்குவானாக.








