ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவை இரண்டு வழக்குகளிலும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சந்தகல’ எனும் தொல்பொருளைத் திருடிய தனது மகனை விசாரணைகளிலிருந்து காப்பாற்றத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது முதன்மை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சி நடந்ததாகச் சுட்டிக்காட்டினர்.
எனினும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை எனக் எனக் கூறி, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் கடவுச்சீட்டை ஒப்படைக்கும் நிபந்தனையிலும் நீதவான் பிணை வழங்கினார்.
அத்துடன், ஊடக அமைச்சராக இருந்தபோது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 6 பேரை சட்டவிரோதமாகத் தனது தனிப்பட்ட ஊழியர்களாக நியமித்த இரண்டாவது வழக்கிலும், அவரைத் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.









