பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ராவணா எல்ல சரணாலயத்தின் உட்புற குகை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரிதான இயற்கை நீர் மூலமான ‘நில்திய பொகுன’ (Nildiya Pokuna) பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுலா நடவடிக்கைகளை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நில்திய பொகுன அதன் தனித்துவமான புவியியல் அம்சங்கள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒரு இடமாக மாறியுள்ளது.
இந்த அரிய இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படி நெறிப்படுத்தவும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவினால் ஆய்வு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளை சட்ட வரைஞர்கள் பரிசீலித்து உறுதிப்படுத்தியுள்ளதுடன், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன.








