(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் இன்று (17) திங்கட்கிழமை ஆதம்பாவா எம்.பி.யினால் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமது வீடுகளை பூரணப்படுத்துவதற்காகஇரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட இக்காசோலைகளை, இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேச செயலாளர் எம்.எம்.எம். ஆசிக் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர் சபேஸ்கான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் மற்றும் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.










