சிறுபோகம் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையான காலப்பகுதியில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான 4 நாட்களுக்குள் இந்த நெல் தொகுதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
இதுவரை அதிகளவிலான நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவிலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபோக நெல் கொள்வனவு பணிகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் பகுதிகளை மையப்படுத்தி நெற்களஞ்சியசாலைகளைத் திறந்து நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்திருந்தது.
அதற்கமைய, நெல் கொள்வனவு செய்யப்படவுள்ள விலைகளும் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு கிலோ நாடு நெல்லுக்கு 120 ரூபாயும், ஒரு கிலோ சம்பா நெல்லுக்கு 130 ரூபாயும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லுக்கு 140 ரூபாயும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த விலைகளின் கீழ் தற்போது 143 நெற்களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் தெரிவித்துள்ளார்.









