2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 646 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 3,062.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு அமைய, ஏனைய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளுதல், திறமையுள்ள தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புச் சந்தைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நலன்புரி நன்மைகளைச் செயல்படுத்துதல் போன்ற நடைமுறைகள் காரணமாக, இலங்கைத் தொழிலாளர்கள் அதிகளவில் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லத் தூண்டப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 79,954 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், அவர்களில் அதிகமானோர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்றுள்ளனர். அந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 17,012 என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் பதிவான அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை பதிவாகியிருந்தமையும் ஒரு சிறப்பம்சமாகும்.









