எதிர்வரும் பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெருமளவிலான தன்சல்கள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
வெசாக் போயா தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகளவிலான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகளவிலான தான்சல்கள் வடமத்திய மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தன்சல்களை நடத்தும் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைத் தவிர்ப்பது முக்கியம் என சுட்டிக்காட்டிய அவர், பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் சூடான பானங்கள் மற்றும் உணவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி சோதனைகள் நடத்தப்படும் என்றும் இங்கு குறிப்பிட்டார்.
சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமித்து வைப்பது மிகவும் அபாயகரமானது என்பதால், இது குறித்து அதிக கவனம் செலுத்தி செயற்படுமாறு அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த நாட்களில் டெங்கு அதிதொற்று நிலைமை காணப்படுவதால், தன்சல்களுக்காக பொலித்தீன் பயன்படுத்துவது அதற்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டிய அவர், தன்சல்களை வழங்கும் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குறித்து அதிக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என்றும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் போது மேலும் தெரிவித்தார்.
“முந்தைய சந்தர்ப்பங்களில், குறிப்பாக கோப்பி மற்றும் குளிர்பானத் தான்சல்களில் பானங்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் கண்ட இடங்களில் வீசப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், இவ்வாறு வீசப்படும் பாத்திரங்களில் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுகிறது.” என்றார்.









