





ஸ்ரீ புதிய கதிரேசன் கோவிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம், ஜூலை மாதம் 28 ஆம் திகதி மாலையில் அலரி மாளிகைக்கு முன்பாக வருகை தந்தது. இதன்போது வேல் ஊர்வலத்திற்குப் பிரதமர் அலுவலகத்தின் சார்பாகப் பூசை வழிபாடுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
அலரி மாளிகையிலிருந்து பாரம்பரிய மேளவாத்தியங்கள் முழங்கப் பிரதமர் வேல் இரதத்தின் முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வேல் இரதத்தில் எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்குப் பிரதமர் பழத்தட்டினைப் பூசையாகச் சமர்ப்பித்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டுத் தெய்வ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, வேல் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பிரதமரின் இந்தப் பங்கேற்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை போர்த்தித் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
கொழும்பு செட்டித் தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் கோவிலினால் வருடாந்தம் நடத்தப்படும் 152 ஆவது வேல் ஊர்வலமே இம்முறை நடைபெறுகின்றது. இந்த வருடாந்த ஆடி வேல் மகோற்சவமும் இரதோற்சவ விழாவும் 1874 ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ஊடகப் பிரிவு








