நில்திய பொக்குனவைப் (Nildiya Pokuna) பாதுகாப்பதற்காகச் சிறப்பு விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடும் நிகழ்வு 07.09.2026 நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சில், சுற்றுாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தியின் தலைமையில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடப்பட்டது.
வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ராவணா எல்லை சரணாலயத்திற்குள் அமைந்துள்ள நில்திய பொக்குனவைப் பார்வையிட வரும் மக்களுக்குச் சேவை வழங்குபவர்களை நிர்வகிப்பது தொடர்பான பல விதிகள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பகுதியான ராவணா எல்லை சரணாலயத்திற்குள் அமைந்துள்ள நில்திய பொக்குனவைப் பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விதிகளுடன், தரமான சுற்றுலா ஈர்ப்பை உறுதி செய்வதற்கான பல விதிகளும் இதில் அடங்கும்.
நில்திய பொக்குனவைப் பார்வையிடுவதற்காக ராவணா எல்லை சரணாலயத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபரும், சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதையும் நிலைநிறுத்துவதையும் உறுதி செய்யும் நோக்கத்துடன், இந்த உத்தரவுகளின் விதிகள், சட்டத்தின் விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்படும் பிற உத்தரவுகளுக்கு அமையச் செயல்பட வேண்டும்.
மேலும் சட்டத்தின் 68ஆ பிரிவு II இன் கீழ் பணிப்பாளர் நாயகத்தால் தயாரிக்கப்படும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
இந்த நடவடிக்கைகளின் கீழ், 10 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபரும் குகைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்குட்பட்ட நபர்கள் தங்களின் பாதுகாவலருடன் வந்தால் மட்டுமே குகைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.
மேலும், பாடசாலை சீருடை அணிந்திருக்கும் அல்லது தொடர்புடைய கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையைக் கொண்டிருக்கும் அல்லது கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு மாணவரும் இந்த உத்தரவுகளின் நோக்கங்களுக்காக ஒரு மாணவராகக் கருதப்படுவார். அத்துடன் அனுமதிக்கப்பட்ட வழிகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
சிறப்பு விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலின்படி, குகைக்குள் நில்திய பொக்குனவின் தண்ணீரில் இறங்குவது, தண்ணீரில் குப்பைகளை போடுவது, துப்புரவு முகவர்களைப் பயன்படுத்துவது அல்லது ஏதேனும் பொருட்கள்/திரவங்களைச் சேர்ப்பது, கூச்சலிடுவது, இசைக்கருவிகளை வாசிப்பது அல்லது ஒலி எழுப்பும் சாதனங்களைப் பயன்படுத்துவது, தீ மூட்டுவது, புகைபிடிப்பது அல்லது மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது, கற்களை நகர்த்துவது அல்லது கற்களின் நிலையை மாற்றுவது, கற்கள் மீது எழுதுவது அல்லது அடையாளங்கள் இடுவது ஆகியவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.









