இந்திய அரசின் ஆதரவுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள இந்திய – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் தலைமையில் 03.09.2026 முற்பகல் அமைச்சு வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் மைத்திரி குல்கர்னி உட்பட பிரதிநிதிகள் குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள, துறைமுக அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உரிய அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.
இதன்போது முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் அது குறித்து விரிவாகக் கலந்துரையாடி உடன்பாடுகளை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் கூட்டு கண்காணிப்புக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழுவொன்றை அமைப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் முன்னேற்றத்தை மிக விரைவில் இந்திய அரசிடம் சமர்ப்பித்து, இறுதி முடிவை விரைவாக வழங்குவதற்கு இந்தியப் பிரதிநிதிகள் குழு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையிலான கடல்சார் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல், வட பிராந்தியத்தின் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், இத்திட்டத்தின் பலன்கள் வட பிராந்திய மக்களுக்குக் கிடைக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2026 பெப்ரவரி மாதத்தில் அமைச்சர் அனுர கருணாதிலக்க காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலைமையை பார்வையிட்ட பின்னர், இத்திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் துறைமுக அதிகார சபையின் முகாமைக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
எதிர்வரும் குறுகிய காலப்பகுதியில் உரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.









