சில்மியா யூசுப்
கொழும்பு: வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், 2026 மே 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2025 ஆம் ஆண்டு வியட்நாமிற்கு மேற்கொண்ட அரசுமுறை விஜயத்தைத் தொடர்ந்து, இலங்கை – வியட்நாம் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த விஜயம் இடம்பெறுகிறது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். மேலும், வியட்நாம் ஜனாதிபதி “இலங்கை – வியட்நாம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா மன்றம்” திறப்பு நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதியுடன் அந்நாட்டு அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள், குறிப்பாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு செயலாளரும் இந்த விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.










