ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ‘pravesha’ அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது.
ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.
இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர்கள் சங்கம், இலங்கை பாதுகாப்பற்ற ரயில் காவலர்கள் ஒன்றியம், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் ரயில் பொது முகாமையாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதால், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே இந்தப் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.









