நிறுவன ஒழுக்கக் கோவை தயாரித்தல் குறித்த ஒரு நாள் , செயலமர்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களில் நிறுவப்பட்ட 244 உள் விவகாரப் பிரிவுகளுக்காக இந்தப் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேர்மை அபிவிருத்திப் பணியகத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சந்திமா விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. பிரசன்ன சந்தித் ஆகியோரின் வளவாளர் பங்களிப்புடன் நடைபெற்றது.
இதில் அரச திணைக்களங்கள், அரச நியாயாதிக்க சபைகள், மாகாண அமைச்சுகள் மற்றும் மாகாண திணைக்களங்களின் உள் விவகாரப் பிரிவுத் தலைவர்கள் மற்றும் நேர்மை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதுதவிர, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சுகள் மற்றும் மாகாண திணைக்களங்களின் அதிகாரிகளும் இணையவழியாக (Online) இந்த செயலமர்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.








