தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 36 ஆண் சந்தேகநபர்களும் 5 பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள் மற்றும் 21 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 500 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்களும், 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









