எந்தவொரு வைத்தியரின் பரிந்துரையுமின்றி போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றினை தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அதிகாரிகள் அண்மையில் முற்றுகையிட்டனர்.
மருத்துவ விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் அங்கு விற்பனை செய்யப்பட்டமை இதன்போது தெரியவந்துள்ளது.
அத தெரண புலனாய்வு தொகுப்பில் நேற்று (26) இந்த விடயம் வௌிப்படுத்தப்பட்டது.
மருதானையில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் வைத்தியரின் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த தகவலை தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளனர்.
இதற்கமைவாக, தகவலை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அத தெரண, மருதானை பொலிஸார் மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம உணவு மற்றும் ஒளடதப் பரிசோதகர் நெவில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த இடத்தை முற்றுகையிடுவதற்காக ஒன்றிணைந்தனர்.
நரம்பியல் நோயாளிகளுக்காக வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துத் தொகையொன்று போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது இதன்போது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய தகுதிகள் கூட இல்லாத ஒருவரால் நடாத்திச் செல்லப்படும் இந்த மருந்தகத்தில், குறித்த மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.
மருத்துவ விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும், அதேவேளை தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ள 8 வகையான மருந்துகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த மருந்துகள் இந்த இடத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.
எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களை நாட்டிற்கு வெளிக்கொணர அத தெரண ‘உகுஸ்ஸா’ புலனாய்வு பிரிவு தயாராகவுள்ளது.









