குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றுவது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் 07.08.2026 மற்றும் அதற்கு முதல் நாள் (06.08.2026) மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.
இச்சம்பவங்களில் 3 சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் 07.08.2026 ஏற்படுத்திய பதற்றத்தின் போது, சிறைக்கூடங்களின் கூரைகளை உடைத்துச் சேதப்படுத்தியமையால் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், கைதிகளை அந்த இடங்களில் வைத்திருக்க முடியாமையே இதற்குக் காரணமாகும்.
இதற்கமைய, 08.08.2026 இரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் தலையீட்டில் இது குறித்து ஆராயப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மோதலின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அங்கு உறவினர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.









