உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை நீதித்துறை சேவை சங்கம் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதித்துறை அமைப்பின் சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டி இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்பு எவ்வித திருத்தத்தையும் மேற்கொள்ளாமல், நீதித்துறை அமைப்பின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் தொடர்ச்சியான மரியாதையையும் பாதுகாக்குமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதி உயர் நீதிமன்றங்களான மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசியலமைப்புத் திருத்த யோசனையை அரசாங்கம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் கூறப்படுகிறது.
இந்த யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டின் முதன்மை நீதிமன்ற நீதிபதிகளான மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களை உள்ளடக்கிய இலங்கை நீதித்துறை சேவை சங்கமும் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூலை 11 ஆம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதுடன், அது குறித்து ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவும் தீர்மானித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில், உயர் நீதிமன்ற நீதியசர்களின் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பில் நீதித்துறை சேவை சங்கம் உடன்படவில்லை எனத் தெரிவித்து, நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு அந்த சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த திருத்தத்தை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்பது குறித்தும் நீதிச் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.









