ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் அமேசன் கல்லூரிக்கு முன்பள்ளி டிப்ளோமா பாடநெறிக்கான அரச அங்கீகாரத்தினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.
இந்த அங்கீகாரத்துக்கான ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பத்தர முல்லையில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல் ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் டாக்டர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடத்தில் இருந்து அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் உத்தியோகபூர்வமாக இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டார்.
முன்பள்ளி மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி டிப்ளோமா பாடநெறி இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி செயலகத்தில் (NSECD) 2026 முதல் 2029 வரையிலான காலப்பகுதிக்காக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரத்தின் மூலம் குறித்த டிப்ளோமா பாடநெறி தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டமாக அமைந்துள்ளதுடன், மாணவர்களுக்கு தரமான மற்றும் தொழில்துறைக்கேற்ற கல்வியைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும், ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் கல்விச் சேவையில் ஈடுபட விரும்புவோருக்கு இந்தப் பாடநெறி சிறந்த அடித்தளமாக அமையும் என முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்
அத்துடன், இப்பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ், சொந்த முன்பள்ளி (Pre-School) ஒன்றை ஆரம்பிப்பதற்கான மேலதிக தகுதி ஆவணமாகவும் பயன்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வித் துறையில் தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் அமேசான் கல்லூரி, எதிர்கால கல்வியாளர்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார்
தெரிவித்தார்.









