அமெரிக்காவில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இருப்பு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த கிரகத்திலேயே அதிக கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம்தான் உள்ளது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு யாருக்கும் தெரியாத பல ரகசிய வழிகளில் இருந்து எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என்றும், அவற்றில் சிலவற்றைத் தான் வெளியில் பகிரங்கமாகச் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 300 டொலருக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவின் உத்திகளால் அது தற்போது 96 டொலர் என்ற அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிவுக்கு வந்த பின்னர், கச்சா எண்ணெயின் விலை முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாகக் குறையும் என்பதால் மக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவியது. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் எரிபொருள் இருப்பு குறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ட்ரம்பின் இந்த உரை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








