உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வியியல் பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று 26.05.2026 நடைபெறவுள்ளது.
அரசுப் பல்கலைக்கழகங்களின் 2018/19 மற்றும் 2019/20 ஆகிய கல்வியாண்டுகளுக்குரிய கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்தே இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைச் சட்டத்தின் ஆசிரியர் நியமன அட்டவணைப்படி, தங்களை ஆசிரியர் சேவையின் 2.2 தரத்திற்கு சாதாரண நேர்முகத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் ஊடாக மாத்திரமே இணைத்துக்கொள்ள வேண்டும் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
இருப்பினும், இந்த பட்டதாரிகள் இதுவரை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக இதுவரை எவ்வித தெளிவான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பிரதமருடன் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டதுடன், அதற்கமைய மார்ச் மாதம் 3ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு இணையாக இந்தக் கல்வியியல் பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பான விடயம் பிரதமரின் அலுவலகத்தினால் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அந்த கடிதத்தில் உள்வாங்கப்பட வேண்டிய பட்டதாரிகளின் துல்லியமான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என மாகாண சபைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் 23,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையின் கீழ், இந்தக் கல்வியியல் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள முடியாது எனவும் மாகாண சபைகள் தெரிவித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








