(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “அகன்று செல்” (Go Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் 18.05.2026 திங்கட்கிழமை சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் இருக்கின்ற பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். இந்திக தலைமை தாங்கி, முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
செயற்றிட்டத்தின் முக்கிய தொனிப்பொருளாக “அகன்று செல்” – போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதை இது குறிக்கிறது.
போதைப்பொருள் தொடர்பான புகார்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஊர் முழுவதும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் இந்தச் செய்தியை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் பிரதிநிதிகள், பொலிஸார், பிரஜாசக்தி தவிசாளர்கள், சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி ஆதரவு தெரிவித்தனர்.









