நாட்டிற்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
16.05.2026 பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள பொதுவான வானிலை முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள இந்த குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் நகர்வு, வளர்ச்சி மற்றும் பாதை ஆகியவற்றை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.









