(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நீர்கொழும்பு – கொச்சிக்கடை NG/தோப்பு தோமஸ் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில், “டிஜிட்டல் உலகின் பாதுகாப்பும் பொறுப்பும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு 15.05.2026 வெற்றிகரமாக நடைபெற்றது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) சமூகப் பணி இளமாணி (BSW) பட்டப்படிப்பு இரண்டாம் வருட மாணவர்களின் “Youth and Development” பாடநெறியின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடுகளிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த செயலமர்வில், பாடசாலையின் தரம் 11 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு விரிவுரையாளர் எப்.ஆர். ரமீஷாகான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், எஸ்.தர்ஷிகா,
பீ. கிருத்திகா, சீ.தர்ஷனி, எஸ். கஸ்தூரி, எம்.எம்.எப். சம்ஹா மற்றும் எம்.எச்.எப். சாதிகா ஆகிய இரண்டாம் வருட மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதான வளவாளராக சமூகப் பணி இளமாணி பட்டப்படிப்பின் மூன்றாம் வருட மாணவரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான ஏ. முஹம்மது இன்சாப் கலந்துகொண்டு, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினார்.
குழுப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டதுடன், இந்நிகழ்வு பாடசாலை சமூகத்தினரிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.









