எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்தியவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் பயிலும் ஒரு மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் காயமடைந்த மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் 13.05.2026 காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் மீது தாக்குதல் நடத்தியபோது, அதனைத் தடுக்கச் சென்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவரை, தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








