தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் கலாபெவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 11.05.2026 மாலை முதல் இவ்வாறு திறக்கப்படும் வான்கதவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, தற்போது நீர்த்தேக்கத்தின் 04 வான்கதவுகள் தலா 06 அடி வரையிலும், 04 வான்கதவுகள் தலா 05 அடி வரையிலும் மற்றும் 04 வான்கதவுகள் தலா 04 அடி வரையிலும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாடிக்கு 14,287 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.
நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கலா ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஓயாவைப் பயன்படுத்துபவர்களும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.










