ஐ. ஏ. காதிர் கான்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து 10 கோடி ரூபா பெறுமதியான”குஷ்” வகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியுடன் கடந்த மாதம் காணாமல் போனதாகக் கூறப்படும் “குஷ்” போதைப் பொருளையே, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் (08) கண்டெடுத்துள்ளனர்.
கனடாவில் இருந்து டுபாய்க்குக் கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருள், கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான “UL-226” மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பயணப் பொதியில் 19 கிலோ 588 கிராம் “குஷ்” போதைப் பொருள் இருந்ததாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவர்களின் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இது குறித்த மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.