நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் சிறுபோக அறுவடையின் மூலம் நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காய நுகர்வு சுமார் 320,000 மெட்ரிக் தொன்னாகும்.
வரலாற்றில் அதிகபட்ச பெரிய வெங்காய உற்பத்தி 2014 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதுடன், அந்த ஆண்டில் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து 100,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது.
இருப்பினும், உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுதல் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிய வெங்காயச் செய்கையிலிருந்து விலக நேரிட்டது.
அதன்படி, விவசாயிகளை மீண்டும் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறப்புத் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளதுடன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெங்காயச் செய்கையை மேற்கொள்வதே இதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.
புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்குப் பெறக்கூடிய பெரிய வெங்காய அறுவடைகளை அதிகரிப்பதற்கும், குறைந்த உற்பத்திச் செலவில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் பயிற்சி பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்தார்.
அதற்கமைய, சிறுபோக அறுவடையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








