இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை 20.12.2025 அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதோடு, அரசாங்க சேவைகளை நவீனமயப்படுத்தவும், மக்கள் மற்றும் வணிகங்கள் அவற்றை இலகுவாகவும் வினைத்திறனாகவும் அணுகுவதற்கும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஊடாக அரசாங்க சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையத்தள உருவாக்கம், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான வசதி மற்றும் தேவைக்கேற்ப விரிவாக்கக்கூடிய நவீன தரவுத் தளம் போன்ற வசதிகள் உருவாகும்.
இந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு முதலீடுகளுடன், பொதுமக்களும் அரச ஊழியர்களும் இந்த புதிய சேவைகளை தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










