தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பல முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது, ‘உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி’ என்று ஜின்பிங் கூறியுள்ளார். இந்த சந்திப்பு வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன ஜனாதிபதி ஜின்பிங்குடனான சந்திப்பு மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததாக கூறிய ட்ரம்ப், சீனா மீதான வரியை 10% குறைப்பதாக அறிவித்துள்ளார்.
‘சீனாவுடன் மேலும் பேச்சுவார்தைகளுக்காக வருகிற ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன். அதன் பின்னர் சீன ஜனாதிபதியும் அமெரிக்காவிற்கு வருகிறார்.
புளோரிடா, பாம் பீச், வொஷிங்டனில் இந்த சந்திப்பு நடக்கலாம். பல விடயங்களில் இன்று முடிவெடுத்திருக்கிறோம்.
சீனாவுக்கு கணினி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதித்தோம். அனைத்து விடயங்களையும் பேசி முடித்துவிட்டோம் என்று கூற முடியாது.
ஆனால் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை. ஜின்பிங், நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்’ என்றும் ட்ரம்ப் கூறினார்.ஸி ஜின்பிங் கூறுகையில்,
“சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும்.
மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த, அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது”
“அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும்.
உலக பொருளாதாரத்தை மேம்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சில விடயங்களை சாதிக்க முடியும்.
சில வேறுபாடுகள் இருப்பது சாதாரணம்தான். இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் ஏற்படுவது இயல்பானது” என்று தெரிவித்தார்.










