இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
14.10.2025 காலை இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்றும், அந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்கு ஒரு இடைப் பொறிமுறை என்ற வகையில் அரச அதிகாரிகளுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கத் திட்டங்களாக நிர்மாணப் பணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், சரியான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளால் பெருமளவு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எதிர்காலத் திட்டங்களை செயல்படுத்துவது முக்கியமாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்டத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சுரங்கக் கைத்தொழிலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.