தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நேற்று (12) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நினைவு தினம் நடைபெற்றது.
1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வின்போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலிஸார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம் காட்டுப் பகுதியில் சகல பொலிஸாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
பாறுக் ஷிஹான்