மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் 26.05.2025 திங்கட்கிழமை மாலை 4:45 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகியவற்றின் மூலம் ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த வீடுகள் இன்று (26) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து வீடுகளை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர் எம். பிரதீப், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.