அமெரிக்கா தமது விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் 16.07.2027 நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதிய விதியானது, சர்வதேச மாணவர்களுக்கான ‘F’ விசாக்கள், கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருகை தருவோர் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ‘J’ விசாக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ‘I’ விசாக்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிலையான காலப்பகுதியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
இந்த விசாக்கள் தற்போது அந்தந்தப் பாடநெறித் திட்டங்களின் காலம் அல்லது அமெரிக்கா அடிப்படையிலான வேலைவாய்ப்புக் காலம் வரை வழங்கப்பட்டு வருகின்றன.
காங்கிரஸின் மீளாய்வுக்கு உட்பட்டு, கூட்டாட்சிப் பதிவேட்டில் இது வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஜனவரியில் பதவியேற்ற பின்னர் பரந்த அளவிலான குடியேற்ற ஒடுக்குமுறையைத் தொடங்கினார்.
இதன் சமீபத்திய நடவடிக்கையாக சர்வதேச மாணவர்கள், பரிமாற்றப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு புதிய தடைகளை ஏற்படுத்துகின்றது.
சட்டப்பூர்வ குடியேற்றம் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தியல் பார்வைகள் காரணமாக அவர்களின் மாணவர் விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை இரத்து செய்துள்ளதுடன், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தையும் பறித்துள்ளது.
புதிய ஒழுங்குமுறையின் கீழ், மாணவர் மற்றும் பரிமாற்ற விசா காலங்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது.
தற்போது பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஊடகவியலாளர்களுக்கான விசா, அதிகபட்சமாக 240 நாட்கள் வரையோ அல்லது சீனப் பிரஜைகளின் விஷயத்தில் 90 நாட்கள் வரையோ மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.









