கிலியன் எம்பாப்பேயின் அதிவிசேட திறமையின் உதவியுடன், பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இறுதி 32 அணிகள் சுற்றில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்ஸ் அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் சுவீடனைத் தோற்கடித்ததுடன், எம்பாப்பே இப்போட்டியில் இரட்டை கோல்களைப் பதிவு செய்தார்.
போட்டியின் முதலாவது பாதி முடிவடைவதற்கு முன்னர் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 53ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா இரண்டாவது கோலை அடித்தார்.
பின்னர் 74ஆவது நிமிடத்தில் மீண்டும் அதிரடி காட்டிய எம்பாப்பே, மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.
இதேவேளை, உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் கிலியன் எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார்.
அதன்படி, அவர் 10 கோல்களுடன் முன்னிலையில் இருப்பதுடன், லியோனிடாஸ், ரொனால்டோ மற்றும் பீலே போன்ற கால்பந்து உலக ஜாம்பவான்களையும் முந்தியுள்ளார்.
இம்முறை தொடரில் இதுவரை 6 கோல்களைப் பதிவு செய்துள்ள எம்பாப்பே, ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களில் லியோனல் மெஸ்ஸி நிலைநாட்டியிருந்த சாதனையையும் சமன் செய்துள்ளார்.
பிரான்ஸ் அணி தனது இறுதி 16 சுற்றுப் போட்டியில் பராகுவே அணியுடன் மோதவுள்ளது.
இதேவேளை, உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றின் கீழ் 5ஆவது போட்டி நேற்று ஐவரி கோஸ்ட் மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
போட்டியின் முதலாவது பாதியின் இறுதிவரை இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியாமல் போனது.
எனினும், முதலாவது பாதி நிறைவடைவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர், அதாவது 39ஆவது நிமிடத்தில் நோர்வே அணிக்காக அன்டோனியோ நுசா (Antonio Nusa) முதல் கோலை அடித்தார்.
அதன்படி, 1க்கு 0 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி முன்னிலை பெற்றவாறு முதலாவது பாதி நிறைவடைந்தது.
போட்டியின் இரண்டாவது பாதி நிறைவடைவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்னர், ஏர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) நோர்வே அணிக்காக இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்து, அந்த அணியை இறுதி 16 சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
அதற்கமைய, 2க்கு 0 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி இப்போட்டியில் வெற்றியைப் பதிவு செய்தது.
நோர்வே அணி அடுத்த சுற்றில் பிரேசில் அணியுடன் போட்டியிடவுள்ளது.
நோர்வே அணி உலகக் கிண்ணக் கால்பந்து தொடரொன்றில் நொக்-அவுட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டிய முதலாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.









