கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் 11.05.2026 பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 19 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து 58 கணினிகள், 79 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட தொடந்துவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக 35 இந்திய பிரஜைகளும், 20 நேபாள பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
20 முதல் 48 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 25 கணினிகள், 119 கையடக்க தொலைபேசிகள், 750,000 ரூபாய் பணம், கார் மற்றும் ஜீப் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
அதேநேரம், மிதிகம பொலிஸ் பிரிவில் பிங்வத்தை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 28 இந்திய பிரஜைகளும், 05 நேபாள பிரஜைகளும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உரிய விசாயின்றி தங்கியிருந்தமை, சட்டவிரோத சிகரெட்டுக்கள் வைத்திருந்தமை மற்றும் கணினி குற்றங்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.










