தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள தமது கணவருக்கு சித்திரவதை செய்தமை, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியமை, அதிகார துஷ்பிரயோகம், மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
நேற்று (06) தமது மகனையும் சகோதரனையும் சந்தித்த போது சுரேஷ் சலே வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 10 விடயங்களை இக்கடிதத்தின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அவரது உயிர் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து கடுமையான பிரச்சினை எழுந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தாம் எதிர்கொள்ளும் கடுமையான மன உளைச்சலையும் அநீதியையும் மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால், தாம் தற்போது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சலே தனது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நீதிமன்றத்தில் உள்ள ரீட் மனுக்கள் மூலம் தான் நிரபராதி என்பது நிரூபிக்கப்படும் என்ற முழு நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், ஒருவேளை தான் இறக்க நேரிட்டால், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது கணவரின் ஆரோக்கிய நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்தி உடனடியாக தலையிடுமாறு மனோரி சலே இக்கடிதத்தின் ஊடாக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் 7ஆம் திகதியும் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடத்தைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், அது குறித்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த விசாரணைக்காக எந்தவொரு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவோ குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
தடுப்புக் காவலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் உயிர், ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகளுக்கு தெளிவான பொறுப்பு இருக்கும் பின்னணியில், முந்தைய முறைப்பாட்டிற்கு இதுவரை பதிலளிக்காதது கடுமையான பிரச்சினையாகும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இக்கடிதத்தை மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடாகக் கருதி, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் பொலிஸ் மா அதிபரிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.








