மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 28.8.2026 ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கமைய, 28.8.2026 நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேல் சூரியன் உச்சிகொடுக்கவுள்ளது.









